சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் மீனவ பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க சென்ற நான்கு படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் வியாழக்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மீனவர்களையும், விடுதலை செய்யப்படாமல் உள்ள 100க்கும் மேற்பட்ட விசைப் படகையும் விடுவிக்க கோரி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள், இலங்கை அரசிடம் வலியுறுத்தி சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் மற்றும் இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.