நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலக்கரியிலும் ஊழல்!

நாட்டில் கொண்டுவரப்பட்ட நிலக்கரியின் தரம் மற்றும் மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டினார்.

புதிய டெண்டரின் கீழ் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 கப்பல் நிலக்கரியும் தரம் குறைந்தவை எனத் தரவுகள் மூலம் உறுதியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஒரு அலகில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், தற்போது வந்த நிலக்கரியால் 255 முதல் 295 மெகாவாட் வரை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது.

நிலக்கரியின் தரத்தை கொதி கலன் மூலம் கண்டறிய முடியும் எனவும், இந்தத் தரவுகளை யாராலும் மாற்றவோ அல்லது மறைக்கவோ முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தரமற்ற நிலக்கரியால் ஏற்படும் மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்க நேரிடும். இது ‘டீசல் மின் உற்பத்தி மாஃபியா’வுக்குச் சாதகமாக அமைவதோடு, அதன் நட்டத்தை மின் கட்டண உயர்வு மூலம் மக்கள் மீது சுமத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் எச்சரித்தார்.

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது வீதி மின்விளக்குகளின் பராமரிப்புச் செலவுக்காக மக்கள் மீது மேலதிகமாக 2.2% வரியைச் சுமத்த முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.