எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்ற
“தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” எனும் இசை நிகழ்ச்சி மட்டக்களப்பு கல்லடியில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்றது.
இலங்கை பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின்
பிரதான இணைப்பாளர் சகோதரர் வீ.கே.சுரேந்திரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் தென்னிந்திய பிரபல பாடகர் பீ. உன்னிகிருஷ்ணன் அவர்களும் அவரது மகள் செல்வி உத்தரா உன்னிகிருஷ்ணன் மற்றும் பாடகரும் நடிகருமாகிய பிலக் பாண்டியும் பங்கேற்று குறித்த பக்தி இசை நிகழ்ச்சியை அலங்கரித்திருந்தனர்.
குறித்த நிகழ்விற்கு ஆன்மீக பேச்சாளராக இந்தியா – திருவண்ணாமலையில் இருந்து தெய்வீக சகோதரி பி.கு.உமா அவர்கள் கலந்துகொண்டு ஆன்மீக உரை நிகழ்த்தியிருந்தார்.
அத்தோடு கல்லடி கடற்கரையில் 12 ஜோதிலிங்க தரிசன கண்காட்சியும் இதன்போது இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத் ஆகிய இருவரும் கலந்து சிறப்பித்ததுடன், ஊடக அனுசரனையினை சக்தி FM மற்றும் சக்தி TV வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பிதான தலைமையகம் இராஜஸ்தானிலும், உலகம் முழுவதும் 5000 கிளைகளை கொண்டுள்ளதுடன் 147 நாடுகளில் அதன் கிளைகள் வியாபித்துள்ளதுடன், இலங்கையில் அதிகமான மாவட்டங்களில் கிளைகள் நிறுவப்பட்டு தெய்வீக செயற்பாடுகள் மற்றும் சமூக செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், 25 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையம் தமது சேவையினை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


