நூருல் ஹுதா உமர்
ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் அமைக்கப்பட்ட “ஹிஸ்புல்லாஹ் நூலகம்” மற்றும் “KMS ஸ்மார்ட் வகுப்பறை” ஆகியவற்றின் திறப்பு விழா, கல்லூரியின் பணிப்பாளர் அல்-ஆலிம் ஐ. அப்துர் றஹீம் நூரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு, நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியுடன் இணைந்து தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழித் திறன் மற்றும் நவீன அறிவுத் துறைகள் தொடர்பான பயிற்சிகளை வழங்குவது காலத்தின் அவசியமாகும் எனத் தெரிவித்தார். இத்தகைய வசதிகள் மாணவர்களின் அறிவுத் திறனை விருத்தி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்நிகழ்வின் போது திறந்து வைக்கப்பட்ட “ஹிஸ்புல்லாஹ் நூலகம்”, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தந்தையின் பெயரில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் கல்லூரி நிர்வாகிகள், உலமாக்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், சமூக முக்கியஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


