மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற 78 வது சுதந்திர தின நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 78 வது சுதந்திர தின நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்றலில் இன்று (04) திகதி வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந்த், முப்படை உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், லயன்ஸ் கழக தலைவர் மனோகரன் உள்ளிட்ட கழக பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

தாய்த்திரு நாட்டின் தேசிய கொடி அரசாங்க அதிபரினால் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆசியுரைகள், மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையுரை என்பன நிகழ்த்தப்பட்டு, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் அணி நடை, பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய பவணி வகுப்பு மரியாதை மற்றும் சாரணர் மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை மாணவர்களின் மரியாதை அணிவகுப்பு என்பன இடம்பெற்றதனைத் தொடர்ந்து இறுதியாக நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அரச உத்தியோகத்தர்களுக்கு அதிதிகளினால் பயன் தரும் மரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக வளாகத்தில் அதிதிகளினால்
தென்னை மரக் கன்றுகள்
நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.