உயிருக்குப் போராடும் தருவாயிலும் இந்த அரசாங்கம் எங்களைக் கண்டுகொள்ளவில்லை…

(சுமன்)

இறுதித் தருவாயில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் எங்களை இந்த தேசிய மக்கள் சக்தி ( NPP ) அரசாங்கம் கணக்கில் கூட எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என அகில இலங்கைப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் அணிரன் தெரிவித்தார்.

ஆசிரியர் உதவியாளர் சேவையில் ஈடுபட்டு வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களு ஆசியர் நியமனமாக நிரந்தர நியமனம் வழங்கக் கோரி அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 03ம் நாளான இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் கடந்த ஆறு வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளோம். அபிவிருத்தி உத்தியோகத்தராக நாங்கள் நியமனம் பெற்றாலும் வலயக்கல்வி அலுவலகர்களால் குறித்த பாடங்களைப் கற்பிப்பதற்காக பாடசாலைகளில் நியமிக்கப்பட்டு கடந்த அரசாங்கங்களால் நிரந்த ஆசிரியர் நியமனம் தருவதாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம்.

இது தொடர்பாக நீதி மன்றில் வழக்குத் தொடுத்துள்ளதுடன், பலதரப்பட்ட போராட்டங்களையும் நாங்கள் செய்துவந்த நிலையில் எங்களுக்குச் சாதகமான பதில் ஏதும் கிடைக்காத நிலையில் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். எங்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டம் 03 நாளைக் கடந்து 04 நாளுக்கு நகர்கிறது. இறுதித் தருவாயில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் எங்களை இந்த தேசிய மக்கள் சக்தி ( NPP ) அரசாங்கம் கணக்கில் கூட எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

நாட்டில் மாற்றம் தேவை என வடகிழக்கில் உள்ள கணிசமான தமிழ் மக்கள் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரித்து அதிகாரத்தை வழங்கிய போதும் வடகிழக்குத் தமிழர்களை இவர்கள் மதிப்பதாகத் தெரியவில்லை. மட்டக்களப்பில் இருந்து நான் அணிரன் மற்றும் எனது சக ஊழியர் குகதாசன் ஆகியோர் உயிரிழக்கும் சூழலில் உண்ணாவிரதம் இருக்கிறோம். நாங்கள் தமிழர்கள் என்பதற்காகவா இந்த அரசாங்கம் எம்மை புறக்கணிக்கிறது. எனத் தெரியவில்லை.

இந்த எங்களது தொழில் உரிமைப் போராட்டதிற்கு ஆதரவு தரும்படி இருகரம்கூப்பி எமது புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். எமது போராட்டம் வெற்றியடைய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க உதவுவீரக்ள் என்பது எனது நம்பிக்கை.