தமிழகத்தில் வெளியான “சிட்டிசன் ” திரைப்படத்தில் அத்திப்பட்டிக் கிராமம் பற்றி அனைவரும் அறிவோம். அதே பாணியில் இலங்கையில் மலையகத்தில் ஒரு குக் கிராமம் தித்வா பேரிடரில் காணாமல் போயுள்ளது. அதுதான் “றம்பொடகம” என்ற குக்கிராமம்.
கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு “கிணற்றைக் காணவில்லை..” என்று சொன்ன நகைச்சுவை இன்றும் பேசப்படுகிறது. அதே பாணியில் இலங்கையில் கடந்த பேரிடரின்போது கிணறு அல்ல முழுக் கிராமமே காணாமல் போன சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
ஆம் அந்த பாரிய மண் சரிவில் ஒரு முழு கிராமமே மூடுண்டுள்ளது. அங்கு ஒருவர் கூட மிஞ்சவில்லை என்ற அதிர்ச்சி தரும் செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இதுவரை 27 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட அதேவேளை 21 பேரைக் காணவில்லை என்று கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாரம் மனிதக் கால் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு 4 வீடுகளில் வாழ்ந்த தனது உறவுகள் 15 பேரையும் வீடுகளையும் காணாமல் இன்று வரை தேடும் ஓர் இளைஞன். ஆம் அவன் குடும்பத்தை நல்ல நிலையில் வாழவைக்க வேண்டும் என்ற கனவில் கட்டார் சென்று இத் துர்ப்பாக்கிய சம்பவம் கேள்வியுற்று நாடு திரும்பியவர். அவரது மனோநிலை எப்படி இருக்கும்?
அப்படிப்பட்ட சூழ்நிலையில்
அண்மையில்
ஒஸ்கார் சார்பில் நாம் அங்கு நேரடியாக அந்த இடத்திற்கு சென்றோம்.
அருகில் உள்ள பூண்டுலோயா விவேகானந்தா மகா வித்தியாலய அதிபர் ஆறுமுகம் ரவீந்திரன் எமக்கு வழிகாட்டினார். மிகவும் பயங்கரமாக இருந்தது. துர்நாற்றம் வீசியது. அங்குள்ள பாரிய பாறாங்கற்கள் அப்பப்பா? கரைந்து கிடக்கும் கிறவல் குவியல். கீழால் ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீர்.கொடிய துயரம்.
சிலமாதங்களுக்கு முன்பு உலகை ஈர்த்த பஸ் விபத்து ஒன்று இன்றும் ஞாபகம் இருக்கும். ஆம், கதிர்காமத்துக்குச் சென்ற பஸ் ஒன்று கடந்த மே மாதம் 11 ஆம் திகதி கோர விபத்துக்குள்ளாகி 21 பேர் மரணித்து 24 பேர் காயமுற்ற சம்பவத்தை உலகம் இன்னும் மறந்திருக்காது . அக் கோர விபத்து இடம் பெற்றது றம்பொட எனுமிடத்தில்.. அதே இடத்தில் தான் இந்த பாரிய மண் சரிவு ஏற்பட்டிருக்கின்றது .
கம்பளை நுவரேலியா பிரதான வீதியில் றம்பொட எனுமிடம் வருகிறது. அங்கு பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயமும் ஒன்றுமுள்ளது. அங்கு கயிறு கட்டிய மலை என்ற பாரிய மலை ஒன்றும் உள்ளது.
றம்பொடை கிராமத்திலிருந்து கீழ்நோக்கிய பிரதேசத்தில் இந்த குக் கிராமம் அமைந்திருக்கின்றது. ரம்பொடகம என்பது அந்த கிராமத்தின் பெயர் . அங்கு சுமார் 50 குடும்பங்கள் வசித்து வந்ததாம் . அங்கு இன்னும் மண்ணுக்குள் பல உடல்கள் புதைந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது . அந்த பெருவழியில் யாரையும் காணோம். அது நுவரேலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்தது. முழுக்க முழுக்க பெரும்பான்மையின மக்கள் வயல் வேலை செய்கின்ற மக்கள் இருந்தார்கள் .இங்கு ஆறு ஆசிரியர்களும் இருந்ததாக சொல்லப்படுகின்றது. ரம்பொடையில் உள்ள கயிறு கட்டிய மலை என்கின்ற அந்த மலை சரிந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கின்றது. கடந்த 27ஆம் தேதி அதிகாலை இரண்டு மணியளவில் மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொழுது இந்த மண் சரிவு ஏற்பட்டிருக்கின்றது.
மீட்பு தேடுதல் பலனளிக்கவில்லை என்று நம்பப்படுகிறது. அங்கு துர்நாற்றம் வீசுவதாக அயற் கிராமவாசிகள் தெரிவித்தனர். இங்கு இன்னமும் லாறிகளும் கார்களும் தொங்கிய வண்ணம் காணப்படுகின்றன. இன்று அது மயான பூமியாகவே காட்சியளிக்கிறது.
நேரடி ரிப்போர்ட். வி.ரி.சகாதேவராஜா( காரைதீவு நிருபர்) றம்பொடையிலிருந்து


