காரைதீவில் தமிழரசுக் கட்சியின் பாதீடு அமோக வெற்றி!

நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத் திட்டம் (நிதியறிக்கை) இன்று (16) காலை 9:30 மணியளவில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் மாதாந்த கூட்டம் பிரதேச சபை சபா மண்டபத்தில் இன்று நடைபெற்றபோதே மேலதிக 08 வாக்குகளால் நிதியறிக்கை வெற்றி பெற்றது.

முன்னதாக அண்மைய பேரிடரில் உயிர்நீத்த உறவுகளுக்கும், அமரர் கலாநிதி அண்டன் பாலசிங்கம், தமிழ் தலைவர் அமரர் செல்லையா இராஜதுறை ஆகியோருக்கு இரண்டு நிமிடம் மௌனநினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

அடுத்த வருடத்திற்கான இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு 08 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களான (முன்னாள் தவிசாளர்களான) கே. ஜெயசிரில், வை. கோபிகாந்த், எஸ். சிவகுமார், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல், எம்.என்.எம். ரணீஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.எம். ஹில்மி, சுயேட்சை குழு உறுப்பினரும் முன்னாள் உதவி தவிசாளருமாகிய ஏ.எம். ஜாஹீர் ஆகியோர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான ஏ. பர்ஹான், கே. செல்வராணி, எஸ். சுலட்சனா ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர். இச்சமயம் சபையின் 11 உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

அதன்படி தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையிலான முதலாவது வரவு செலவுத் திட்டம் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் தாண்டி பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது.