எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடமாடும் சேவை இன்று (12.11.2025) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமை மற்றும் வழிகாட்டுதலில், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரனின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் இதுவரை காலமும் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுகளைப் பெற்றுக்கொள்ளாத சுமார் 50இற்கும் மேற்பட்டோருக்கான பதிவு சான்றிதழ்களை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் இதன் போது மேற்கொள்ளப்பட்டது.
இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு வலயத்துக்கான பிரதிப் பதிவாளர் நாயகம் கே. நடராசா கலந்து கொண்டதுடன் , கெளரவ அதிதியாக மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் பா. பரசுராமன் கலந்துகொண்டதுடன், இந்த நடமாடும் சேவைக்கான அனுசரணையை மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கே. பேரின்பநாயகம், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நடமாடும் சேவையினை பிரதேச செயலகப் பதிவாளர் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து ஒழுங்கு செய்தமை குறிப்பிடத்தக்கது.


