Made in Sri Lanka” வர்த்தக கண்காட்சி – 2025

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் ஈர்ப்பை இலக்காகக் கொண்டு தொழில் மற்றும் தொழில்முனைவோர் அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய தொழில் அபிவிருத்தி ஆணையகம் ஏற்பாடு செய்த “Made in Sri Lanka” வர்த்தகக் கண்காட்சி அம்பாறை மாவட்டத்தின் அழகிய சுற்றுலாத் தளமான அருகம்பே கடற்கரையில் (29) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹதுன்நெத்தி, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும்
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோரின் பங்குபற்றலுடன் விமர்சையாக இடம்பெற்ற இந்நிகழ்வில், பிராந்திய அரசியல்வாதிகள், பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் ,பல்நிர்வன ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூர் உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளை வெளிநாட்டு நுகர்வோருக்கு அறிமுகப்படுத்துவது இக்கண்காட்சியின் முதன்மை நோக்கமாகும். அதற்காக கிராமிய மட்டத்தில் தயாரிக்கப்பட்ட தரமான தயாரிப்புகளுக்கான 60 க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் இணைக்கப்பட்டிருந்தன.

அம்பாறை மாவட்ட செயலகம், பொத்துவில் பிராந்திய செயலகம், Future Rismo (Pvt) Ltd, Hatton National Bank, Bridjin போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 29, 30 மற்றும் 31 ஆகிய 3 நாட்களும் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கண்காட்சி நடைபெற்றது.

இவ்விற்பனைக் கண்காட்சியில் விளையாட்டு நிகழ்வுகள், பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகள், கலிப்சோ இசை மற்றும் இறுதிநாளில் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன. இதற்கு மேலும் நேரடி உணவு சமைக்கும் அரங்குகள் பலவும் அருகம்பே கடற்கரையில் அமைக்கப்பட்டும், கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.