ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவருடன் கிண்ணியா நகர சபை தவிசாளர் சந்திப்பு

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம். எம் .மஹ்தி அவர்களின் தலைமையிலான குழுவினருக்கும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் Khaled Nasser Al Ameri அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(21) திருகோணமலையில் உள்ள சினமன்ட் ட்ரிங்கோ புளூ ஹோட்டலில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் தலைமையிலான குழுவில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி மற்றும் கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.கே.அனீஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் கிண்ணியா நகர சபை பிரதேசத்தில் நவீன வசதிகளுடனான நகர மண்டபம் அமைப்பதற்கான திட்ட முன் மொழிவுகள் சம்மந்தமாகவும் மீனவர்களுக்கான இறங்கு துறை மற்றும் மீன் சந்தை வசதிகள் தொடர்பாகவும் அதன் மூலம் கிண்ணியா பிரதேசத்திற்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் சுயதொழில் முயற்சிகள் மற்றும் கிண்ணியா பிரதேச எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப் பட்டன.
இதன் போது நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.