களுவன்கேணி கிராமத்தில் மாபெரும் மருத்துவ முகாம்!

( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஒழுங்கமைப்பில் “ஆதித்தி” கைத்தறி நிறுவனத்தின் அனுசரணையில் பொதுப்போக்குவரத்து வசதி குறைந்த களுவன்கேணி கிராமத்தில் மாபெரும் மருத்துவ முகாம் நேற்று முன்தினம் (16) முன்னெடுக்கப்பட்டது .

களுவன்கேணி விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமின் போது விழிப்புணர்வு கருத்தரங்கு, நடமாடும் பல் சிகிச்சைப் பிரிவு , மூக்கு கண்ணாடி வழங்கல்,போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் இரா.முரளீஸ்வரனின் ஏற்பாட்டில் 100 மூக்குக் கண்ணாடிகளை மட்டக்களப்பு LIONS கழகம் ஊடாக பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ முகாமில் வைத்தியர் எஸ்.நிரோஜன் , வைத்தியர் கே.தனுசியா, வைத்தியர் ஸ்ரீ வித்யன்
மற்றும் தொழுநோய்க்கான பிராந்திய வைத்திய அதிகாரி ரி.லுபோஜிதா மற்றும் கண் சம்பந்தமான தொழில் நுட்ப உதவியாளர் ,பல் வைத்தியர் எஸ். கிரிஷாந்தன் பங்கேற்றிருந்தனர்.

இதில் விசேஷமாக நடமாடும் பல் சிகிச்சை பிரிவில் பொதுமக்களின் பல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டன .

.மருத்துவ முகாம் நடைபெற கிராம அமைப்புகள், வைத்தியர்கள், தாதியர், சுகாதார அலுவலர்கள், தாதிய மாணவிகள், மற்றும், சமூகம் சார்ந்த ஆர்வலர்கள்,பாடசாலை அதிபர், மற்றும் வலையக்கல்விப் பணிப்பாளர், மூக்கு கண்ணாடி வழங்குனர்கள் பங்கு பற்றி இருந்தார்கள் .

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத் வைத்தியர் என்ற ரீதியில் வருகை தந்து மருத்துவ முகாம் நிகழ்வுகளை பார்வையிட்டதுடன், இப்பகுதி மக்களின் சுகாதார நிலைமைகளையும் கேட்டு அறிந்து கொண்டதுடன், அப்பகுதிகளுக்கு தொழு நோய் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு உதவுவதாகவும் தெரிவித்திருந்தார் .

இவ் மருத்துவ முகாமில் சிகிச்சை பெறுவதற்காக மாணவர்கள் உட்பட சுமார் 250மேற்பட்டவர்கள் வருகை தந்து பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.