ஹஸ்பர் ஏ.எச்
மாண்புமிகு இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் 1933 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் நாள் இராஜவரோதயம் ,யோகாம்பிகை இணையருக்கு ஏழு உடன்பிறப்புகளுள் இரண்டாவதாக பிறந்தார்.
“வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்“ என்ற முதுமொழிக்கேற்ப கல்வியிலும் விளையாட்டிலும் கண்ணும் கருத்துமாயிருந்தார்.
இவர் தனது தொடக்க கல்வியை திருகோணமலை புனித மரியாள் கல்லூரி மற்றும் புனித சூசையப்பர் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி,குருணாகல் புனித ஆன் ( St. Anne’s College,Kurunegala ) கல்லூரி மற்றும் புனித செபஸ்டியன் கல்லூரியிலும் சட்டக் கல்வியை இலங்கை சட்டக் கல்லூரியிலும் பயின்றார்.
1958 ஆம் ஆண்டில் சட்டப் படிப்பை முடித்த பின்பு திருகோணமலை மாவட்டத்தின் நீதிமன்றங்களில் சட்டவாளராக பணிபுரிந்தார்.
அவர் பணிபுரிந்த காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் சட்டத்துறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத புகழ்பெற்ற சட்டவாளராக விளங்கினார். திருமண வயதில் பி.கே. உருத்ரா,மனோன்மணி இணையரின் மூன்றாவது மகளான லீலாதேவி இணையாரை திருமணம் செய்து இவருக்கு முறையே கிரிசாந்தி,சஞ்ஜீவன்,செந்தூரன் என மூன்று மக்கள் உள்ளனர்.
1956 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இலங்கைத் தமிழர் உரிமை மீட்பு தொடர்பாக,இலங்கைத் தமிழரசுக் கட்சி 1961 ஆம் ஆண்டில் மேற்கொண்ட சத்தியாக்கிரகப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு அறவழிப் போராட்டங்களில் பங்குகொண்டு சிறையும் சென்றார்.
1977 ஆம் ஆண்டில் தந்தை செல்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய பின்பு அவர் ஆற்றி வந்த சட்டத்தொழிலை துறந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டார்.
அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்வந்த வேளையில் ஏறத்தாழ 700 வழக்குகளை கையாண்டு கொண்டிருந்தார்.
1977 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரையும் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார். அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கியதோடு ஆக மொத்தம் 32 ஆண்டுகள் இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பணியாற்றிய பெருமைக்குரியவர் இரா சம்பந்தன் அவர்கள்.
அரை நூற்றாண்டுக்கு மேலாக திருகோணமலை என்றால் இரா சம்பந்தன், இரா சம்பந்தன் என்றால் திருகோணமலை என்ற அளவுக்கு அனைவரும் எண்ணும் வகையில் செயற்பட்டார்.
இலங்கைத் தமிழர் உரிமை மீட்பின் பொருட்டாக தமிழர் விடுதலைக் கூட்டணி,அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவாக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவராகவும் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரையிலும் விளங்கினார் என்பது குறிப்பிடதக்கது.
அதேபோன்று 2015 ஆம் ஆண்டு புரட்டாதி மூன்றாம் நாள் தொடக்கம் 2018 ஆம் ஆண்டு மார்கழி 18 ஆம் நாள் வரையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இரா சம்பந்தன் அவர்கள் திருகோணமலை மாவட்டக் கல்வியை மேம்படுத்துவதில் மிகவும் அக்கறையுடன் இருந்தார்.
சைவ சமயத்தின் மீது கொண்ட மிகுந்த ஈடுபாட்டின் காரணமாக
“ கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் ”
என்ற ஔவையாரின் கூற்றுக்கு இணங்க ஊர்கள் தோறும் சைவ கோயில்களை அமைப்பதிலும் அவற்றை மறுசீரமைப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் சுமூகமான உறவைப் பேணி இலங்கையின் இனச்சிக்கலுக்கு தீர்வுகாண முனைந்த அதேவேளையில்,அவர்கள் விடும் தவறுகளை நேருக்கு நேர் கூறுபவராகவும் விளங்கினார்.
இதுவரையில் இலங்கையின் குடியரசுத் தலைவர்களாக விளங்கிய மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர்களான ஜீனியஸ் ரிச்சட் ஜயவர்த்தன, ரணசிங்க பிரேமதாச, டிங்கிரி பண்டா விஜயதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரீபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகிய குடியரசுத் தலைவர்களுடன் இலங்கைத் தமிழர் இனச்சிக்கலை தீர்ப்பது தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
அதேபோல இலங்கை இனச்சிக்கலை தீர்ப்பது தொடர்பாக இந்தியக் குடியரசின் மாண்புமிகு பிரதமர்களான இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, விஸ்வநாத் பிரதாப் சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய், எச். டி. தேவகவுடா, இந்தர் குமார் குஜ்ரால், மன்மோகன் சிங், நரேந்திர மோதி ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
சம காலத்தில் இனச்சிக்கலை தீர்த்துக் கொள்ள பன்நாட்டு இராஜதந்திரிகளோடும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.
சிறப்பாக 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நோர்வேயின் நடுநிலையாளரான எரிக் சோல்கிமோடு ( Erik Solheim )
இலங்கைத் தமிழர் இனச்சிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார்.
இவர் பதவி வகித்த காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடினமாக உழைத்தார்.
1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை- இந்திய உடன்படிக்கை,வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை உருவாக்கம் முதலியவற்றில் அன்றைய தமிழ்த் தலைவர்களான அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்,முருகேசு சிவசிதம்பரம் ஆகியோருடன் இணைந்து முதன்மையான பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாமல் இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரான மாண்புமிகு ரணசிங்க பிரேமதாசவின் பதவிக்காலத்தில் 1991 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மங்கள முனசிங்க தலைமையிலான தெரிவுக்குழு, குடியரசுத் தலைவர் மாண்புமிகு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியில் இருந்த போது 2000 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு யோசனைகள், மற்றும் குடியரசுத் தலைவர் மாண்புமிகு மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைகள் ஆகியவற்றில் பங்கு கொண்டு காத்திரமான பங்களிப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை நிலவிய நல்லாட்சி அரசு காலத்தில் இனச்சிக்கலுக்கு ஒரு தீர்வு காணலாம் என்று அவர் மிகையான நம்பிக்கை கொண்டிருந்தார்.எனினும் அது நிறைவேறாமை ஒரு துன்பம் தோய்ந்த வரலாறு ஆகும்.
இலங்கைத் தமிழர் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அரை நூற்றாண்டு காலமாக அயராது பாடுபட்ட மாண்புமிகு இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் 2024 ஆம் ஆண்டு ஆனி மாதம் 30 ஆம் நாள் இயற்கை எய்தினார்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது மனைவி லீலாவதி அவர்களுக்கும், மகள் செல்வி. கிரிசாந்தி அவர்களுக்கும், மகன்களான திரு.சஞ்சீவன் மற்றும் திரு.செந்தூரன் உள்ளிட்ட அவருடைய உற்றார் உறவினர் அனைவருக்கும் , எனது சார்பிலும் திருகோணமலை மக்கள் சார்பிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பிலும் துயர் தோய்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


