மட்டக்களப்பு மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான (2025) முதலாவது காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களது தலைமையில்
காணி பயன்பாட்டு திட்டமிடல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன் (காணி) அவர்களது பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், காணி உத்தியோகத்தர்கள், காணி பயன்பாட்டு திட்டமிடல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களங்களின் மாவட்ட மட்ட அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது மட்டக்களப்பில் உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அரச காணிகளை அரச திணைக்களங்களின் பயன்பாடு மற்றும் தனியாருக்கு நீண்ட கால, குறுங்கால குத்தகைக்கு கையளித்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. பிரதேச செயலக ரீதியாக முன்வைக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், பிரதேச செயலக ரீதியில் காணப்படுகின்ற அரச திணைக்களங்களுக்கான காணி ஆவணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் பரிசீலணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில் மாவட்ட பயன்பாட்டு குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது.