டக்ளஸ்சுடன் இணைந்து யாழ் மாநகரசபையை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி 3 வாக்குகள் வித்தியாசத்தில் யாழ். மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

யாழ். மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (13) யாழ். மாநகர சபை சபா மண்டபத்தில்

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது இதம்போது முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

45 உறுப்பினர்களை கொண்ட யாழ். மாநகர சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.

இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக விவேகனந்தராசா மதிவதனியும் அகில இலங்க்சி தமிழ் அரசு கட்சியின் முதல்வர் வேட்பாளராக கனகையா ஸ்ரீ கிருஷ்ணகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

வெளிப்படையாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் விவேகானந்தராஜா மதிவதனிக்கு 19 வாக்குகளும் கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாருக்கு 16 வாக்குகளும் கிடைத்தது.

தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.

இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட விவேகானந்தராஜா மதிவதனி வெற்றி பெற்றதுடன், பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் தெரிவானார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசு கட்சிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பலம் கிடைக்காவிட்டால் நிச்சயமாக ஆட்சி அமைக்க முடியாமல் போயிருக்கும்.