அரசியல் நோக்கங்களுக்காக மனித உயிருடன் விளையாடாதீர். சத்தியலிங்கம் எம்பியை சாடினார் வைத்திய கலாநிதி வினோதன்.

(வாஸ் கூஞ்ஞ) 01.06.2025

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை இப்பகுதி மக்களுக்கு சிறந்த சேவைக்குரியதாக மாற்றுவதற்கு மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுத்திருக்கும் இந்தநேரத்தில் இந்த மாவட்டத்தைச் சாராத பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அற்ப அரசியல் நோக்கங்களுக்காக மக்களின் உயிருடன் விளையாட முனையக் கூடாது என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினை மத்திய சுகாதார அமைச்சுடன் இணைப்பது தொடர்பாக கடந்த மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.

அவ் விடயம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ப.சத்தியலிங்கம் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.

அவருடைய கண்டனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.வினோதன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவிக்கையில்

வன்னிமாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களே உங்கள் மீது எனக்கு மிகவும் பெரிய மதிப்பு உள்ளது

ஆனால் மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலை யாருடைய நிர்வாகத்தின் கீழ் இருக்கவேண்டும் என்ற தீர்மானத்தினை எடுக்கும் தார்மீக உரிமை மன்னார் மக்களுக்கும்இ சமூக அமைப்புகளுக்கும் அவர்களினை பிரதிநித்திக்குவப்படுத்தும் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கு சிகிச்சை வழங்கும் தொழில்சார் நிபுணத்துவமுடைய மருத்துவப்பணியாளர்களுக்குமே உள்ளது என்ற யதார்த்தத்தினை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய உங்களுக்கு புரியவைப்பது எனக்கு பெரிய சிரமமாக அமையாது என்று எண்ணுகின்றேன்.

கடந்த காலங்களில் மன்னார் மக்களினை வடமாகாண அரசியல்இ அரச நிர்வாகங்கள் எவ்வாறு வளப்பகிர்வில் புறக்கணித்தன என்பதனையும்இ கடந்த ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் தேசியவாதிகள் எவ்வாறு மன்னாரின் வளங்களினை விலை பேசினார்கள் என்பதனையும் முழுநாடே அறியும். இந்த நிலைமைதான் இறுதியாக வழங்கப்பட்ட தாதிய நியமனம் வரை தொடர்கின்றது.

சுகாதாரத் துறை மத்திய அரசின் கீழேயே இருக்க வேண்டும் என்பது மக்களின் தீர்ப்பு. அதுவே மன்னார் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பிரதிபலித்தது.

தயவுசெய்து அற்ப அரசியல் நோக்கங்களுக்காக மக்களின் உயிருடன் விளையாடவேண்டாம்.

இல்லையெனில் மாகாணசபைகளே எங்களுக்கு வேண்டாம் என்று வடக்கு மக்கள் ஏற்கனேவே செல்வாக்கு இழந்துள்ள தமிழ் தேசியவாதிகளுக்கு மீண்டும் ஒருமுறை தேர்தலில் பாடம் புகட்டவேண்டிவரும்.என இவ்வாறு தெரிவித்துள்ளார்.